கட்டிலின் மீது படுத்து கொண்டு விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் சாந்தி. அந்த அறைக்குள் தன் கண்ணை நாலாபக்கமும் சுழல விட்டாள். அலங்கோலமான அறை. ஏதோ போர் ஒத்திகை நடந்தது போன்ற காட்சி. எப்பொழுதுவேண்டுமானாலும் கீழே விழலாம் என்று தொங்கும் மின்விசிறி. எங்கிருந்தோ வரும் வெளிச்சத்தில் இவை எல்லாம் கொஞ்சமாக தெரிய அதிகமாக இருட்டுடன் இருக்கும் அறை.
சாந்தி முணுமுணுத்தாள் "காதலிப்பது குத்தமா... அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா..."
அறையின் வெளியில் குக்கர் விசில் சத்தம் கேட்டது. அம்மாவின் சமையல். சாந்திக்கு மிகவும் பிடிக்கும். ஒரு காதல் தனக்கு பிடித்த எல்லா விஷயங்களையும் தன்னிடம் இருந்து பிடுங்கிக்கொண்டது என்று வருத்தப்பட்டாள் சாந்தி.
எழுந்து சென்று அறையின் கதவை தட்டவும் மனமில்லை. எவ்வளவு முறை தட்டியிருப்பாள். இருந்தும் மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று கத்தினாள்.
"அம்மா... அம்மா" என்று தன்னால் முடிந்த வரை பலம் கொடுத்து கதவை தட்டினாள்.
அறையின் வெளியில் சாந்தியின் அப்பா அதிரும் அந்த பூட்டையே பார்த்துக்கொண்டு இருந்தார். அம்மாவும் அங்கே வந்தாள்.
"நான் போய் குருமூர்த்திய பாத்துட்டு வந்துடுறேன் செங்கமலம்" என்றார் அப்பா மாணிக்கம்.
"இப்போ எதுக்குங்க... பையனோட கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. கல்யாணத்த முடிச்சிட்டு அவரை கூப்பிடலாமே?!" என்றால் அம்மா.
"இவள வச்சிக்கிட்டு அவன் கல்யாணத்த எப்படி பண்றது? ஏற்கனவே இவளோட காதல் கன்றாவி எல்லாம் கேள்விப்பட்டு ஊரே சிரிக்குது. ஏதோ சம்மந்தி பெரிய மனசு பண்ணதால இந்த கல்யாணம் நடக்கப்போவுது. இவளால் நம்ம குடும்ப மானமே போச்சு" என்று எரிச்சலுடன் சொன்னார் அப்பா.
அப்பா அம்மாவிற்கு பேசுபொருளாக தான் மாறிவிட்டோமே என்பது அவளுக்கு வேதனை அளித்தது.
கதவின் அருகிலே உட்கார்ந்துகொண்டு சாந்தி மீண்டும் முணுமுணுத்தாள் "காதலிப்பது குத்தமா... அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா..."
“காதலிக்கறது குத்தமில்லடி. அதுவும் அந்த பையனையா? அவனை பாத்தாலே தெரியல பொறுக்கின்னு” அம்மாவை பார்த்து சொன்னார் அப்பா.
“என்னங்க நடந்தது நடந்துபோச்சு. இப்போ எதுக்கு அதெல்லாம் பேசி. அவ மனசு கஷ்டப்பட போகுது” என்றாள் அம்மா.
"ஓ.... அப்ப என் மனசு கஷ்டப்படலாமா? இவ்ளோ வருஷம் வளர்த்த எனக்கு அவளுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா?. இப்பவும் அதைத்தான் செய்யப்போறேன் செங்கமலம். பையன் கல்யாணத்துக்கு முன்னாடி அவள இங்கேந்து தொரத்துனா தான் நல்லது. காதல் காதல்னு சொன்னா தானே. அவன் கூடவே போய் இருக்கட்டும். இங்கே இருந்து என்னோட நிம்மதிய ஏன் கெடுக்குறா?" என்றார் அப்பா.
அவர் குரலில் ஒரு வருத்தம் தெரிந்தது. விரக்தி இருந்தது.
“நா வளர்த்த பொண்ணு என் பேச்ச தட்டமாட்டானு கர்வமா சொன்னேனே! ஆனா இப்படி பண்ணிட்டா பாரு. இன்னைக்கு அவளா இல்ல நானான்னு பாத்துடுறேன். குருமூர்த்திய அழைச்சிட்டு வந்து அவள அடிச்சு துரத்துறது தான் என்னோட முதல் வேல” என்றார் அப்பா.
"என்னங்க நீங்க இவ்ளோ கடுமையா பேசி நான் பாத்ததேயில்ல. ரெண்டாவது குழந்த பொண்ணுதான் வேணும்னு தவம் இருந்தீங்களே! அந்த அப்பாவா இப்படி பேசுறது? அவ பொறந்ததும் தான் எனக்கு அதிஷ்டம்னு அடிக்கடி சொல்வீங்க. அவளால தான் இந்த வீட்டையே வாங்குனேன்னு இந்த வீட்டுக்கு சாந்தி நிலையம்னு பேரு வச்சீங்க..." என்று கண் கலங்கினாள் அம்மா.
அம்மாவின் கண்ணீர் சாந்தியை என்னவோ செய்தது. அவசரப்பட்டு முடிவு எடுத்தது வருத்தம் தந்தது. அப்பா அம்மா சொல் பேச்சை கேட்டு அவர்கள் காட்டியவனை கரம் பிடித்திருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டார்களே என்று நினைத்தாள்.
“சரி. அத பத்தி இப்போ என்ன? அவளால இந்த வீட்ல சாந்தியே போச்சு. வரபோற மருமகளாவது சாந்தியோட இருக்கணும்னா நான் சொல்றத கேளு. எக்காரணம் ஆனாலும் அந்த பூட்ட மட்டும் தொறக்காத. அந்த ரூமல அவ ஆடின ஆட்டத்தை பாத்தேல்ல. அவளோட நம்மளால மல்லுக்கட்ட முடியாது. இதோ வரேன்...” என்று சொல்லிவிட்டு அப்பா வேட்டை விட்டு வெளியே போனார்.
அம்மா பூட்டையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். பிறகு, அந்த சிறிய வீட்டின் கிச்சனுக்குள் போனாள்.
"இப்போ சந்தோஷமாடி உனக்கு? என்றாள் அம்மா.
சாந்தி மீண்டும் முணுமுணுத்தாள் "காதலிப்பது குத்தமா... அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா..."
“காதலாம் காதல்... உன்னோட அப்பா, அண்ணன் பாவம்டி. உனக்காக எல்லாத்தையும் தியாகம் செஞ்சாங்க. அண்ணன் கல்யாணத்தை முடிச்சிட்டு பேசலாம்னு தானே சொன்னேன். கேட்டியா?" என்றாள் அம்மா.
“என்ன மன்னிச்சிருமா. இதுக்குமேல எனக்கு தண்டனை வேணாம்மா. யாரு என்ன சபிச்சாலும் நீ மட்டும் சபிக்காதேம்மா. நா உன்கூடவே இருக்கனும். என்ன போக மட்டும் சொல்லிடாதேமா” என்றாள் சாந்தி.
“நீ எங்களுக்கு பண்ணதெலாம் போதும்மா. உன்ன பெத்த கடனுக்காக நா உன் பாவத்தை சுமக்குறேன். வரப்போறவ எனக்கும் பொண்ணாவும் மருமகளாவும் இருப்பா. நீ போய்டு. அவன்கிட்டயே போய்டு” என்றாள் அம்மா.
"அவனை பத்தி எனக்கே சரியா தெரியலமா. அவன் ஒரு பொறுக்கி. அவன நா காதலிச்சிருக்க கூடாது" என்றாள் சாந்தி.
அம்மாவிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.
“அம்மா பேசுமா... எதையாவது சொல்லி என்ன திட்டுமா. இத நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருக்கணும். அண்ணனோட கல்யாண பிக்ஸ் ஆனதால் சொல்லாம மறச்சிடேன். அவன பத்தி ரொம்ப லேட்டா தான் புரிஞ்சிக்கிட்டேன். தப்பு அவன் மேல இல்ல. என் மேல தான். நான் தான் அவன் என்ன காதலிக்கறதா நெனைச்சேனே தவிர அவன் அப்படி நெனக்கல. அவனுக்கு இன்னொரு பொண்ணுகூட... பல பொண்ணுங்க கூட தொடர்பு இருக்கு" என்றாள் சாந்தி.
அம்மா சமையல் அறையில் “ஓ” வென்று அழுதாள்.
நீ கதவ தொறந்து விடுமா. எது நிஜம்னு எனக்கு புரிஞ்சிருச்சு. இனிமே உங்க கூட இருக்க முடியாதுன்னு என்னக்கு தெரிஞ்சிருச்சு. உங்களுக்கு தொந்தரவு தராம போயிடுறேன். அவனையும் நா ஒன்னும் பண்ணப்போறதில்லை. அவனோட விதி என்னனு எனக்கு தெரியும். அவன் நல்லாவே இருக்க மாட்டான். கூடிய சீக்கிரம் ஒரு ஆக்சிடெண்ட்ல அடிபட்டு செத்துப்போவான் என்றாள் சாந்தி.
“அம்மா அம்மா…” என்று கதவை பலமாக தட்டினாள் சாந்தி.
அம்மா கண்களில் நீருடன் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள். பூட்டு ஆடுவது அவள் கண்ணில் பட்டது. கதவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு திரும்பிப்பார்த்தாள். முருகன் படத்தின் ஆணியில் சாவி தொங்கிக்கொண்டு இருந்தது.
அதை கையில் எடுத்தாள் அம்மா செங்கமலம். அப்பா மாணிக்கமும், கேரள நம்பூதிரி குருமூர்த்தியும் வீட்டுக்குள் நுழைந்தனர். வலது பக்க ஜடா முடி, நெற்றி நிறைய குங்குமம், தோளில் பெரிய கருப்பு மூட்டை என்று குருமூர்த்தி வீட்டுக்குள் உடுக்கை சத்தத்துடன் எதையோ ஜபித்துக்கொண்டே வந்தார். பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
“என்னங்க. அக்கம் பக்கத்துல என்ன நினைப்பாங்க. ஏன் இவர இப்போ கூட்டிகிட்டு வந்தீங்க?” என்றால் அம்மா.
"சேட்டா. மெதுவா மெதுவா" என்றார் அப்பா.
தன் தோளில் இருந்து பெரிய மூட்டையை கீழே வைத்தார். மூட்டைக்குள் இருந்து இரண்டு மண்டை ஓடு எட்டிப்பார்த்தது.
அதை கண்டதும் அம்மா செங்கமலம் இன்னும் பதறினாள்.
"இது என்ன வீடா இல்ல சுடுகாடா? என்னங்க இதெல்லாம்" என்றாள் அம்மா.
"சேச்சி.. நிண்ட மகள் கர்ப்பமாய் இருந்துச்சா.." என்றார் குருமூர்த்தி.
அம்மாவிற்கு திடுக்கிட்டது. அறைக்குள் இருந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாள் சாந்தி.
"என்ன மன்னிச்சிருமா.. உங்கிட்ட சொல்ல எவ்வளவோ முயற்சி பண்ணினேன். என்னால சொல்ல முடியல. நான் கர்ப்பம்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் தான் அவனோட உண்மை முகமே எனக்கு தெரிஞ்சுது. நம்ம குடும்பத்துக்கு அது ஒரு பழி வந்திடக்கூடாதுன்னு தான் இந்த முடிவை நான் எடுத்தேன்" என்றாள் சாந்தி.
"எண்ணெயை சொல்லறீங்க. எனக்கு தெரியாது?" என்று சொல்லிக்கொண்டே கதவருகில் சென்று "அடிப்பாவி அந்த குழந்தைய கொல்றதுக்கு உனக்கு எப்படிடி மனசு வந்துச்சு" என்று அடக்கிக்கொள்ள முடியாமல் கதறினாள் அம்மா.
"சேச்சி... மறிச்ச அந்த குஞ்சு அந்தரத்துல தவிக்குது. அது ஆத்மா சாந்தி அடையனும்" என்றார் குருமூர்த்தி.
"என்னங்க.. இந்தாங்க சாவி. அவள வெளில விடுங்க. இதுக்குமேல அவளுக்கு பெரிய தண்டனை தேவையில்லை. இப்போ அவளோட தப்பு என்னனு அவளுக்கு தெரிஞ்சிருக்கும். பூஜை, சடங்குன்னு இதுக்கு மேல அவள தொந்தரவு பண்ண விரும்பல" என்றாள் அம்மா.
"நா சொல்றது என்னன்னா..." என்றார் அப்பா.
"தயவு செஞ்சி நான் சொல்றத கேளுங்க.." என்று அப்பாவின் மீது சாய்ந்து அழுதாள் அம்மா. "அவ உயிரோட இல்லாததே அவளுக்கான தண்டனை தான். இப்போ செத்தும் அவள தொந்தரவு பண்ண விரும்பல. அந்த கதவ தொறந்து விட்டுடுங்க" என்றாள் அம்மா.
அந்த அறைக்குள் இருக்கும் மின்விசிறியில் தான் சாந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டாள். அவள் இருக்கும் பொழுது அவள் மூன்று மாத கர்பம். அவள் தூக்கு போடும்பொழுது அப்பா, அண்ணன் கதவை உடைத்து உள்ளே வந்து அவளை காப்பற்ற முடியாமல் கோபத்தில் அந்த இடத்தையே போர்க்களமாக்கி விட்டார்கள்.
அப்பா சாவியை வாங்கிக்கொண்டு அந்த பூட்டை திறந்தார். அந்த பூட்டின் பின்பகுதியில் சிறியதாக மந்திரிக்கப்பட்ட எந்திரம் இருந்தது. கதவை திறந்தார். ஒரே இருட்டு. திறந்து இருபது நாளுக்கு மேல் இருக்கும். சில நாட்களுக்கு முன்பு வீட்டில் அமானுஷய விஷயங்கள் நடந்ததால் குருமூர்த்தி தந்த எந்திர பூட்டை வைத்து அப்பா பூட்டினார்.
"சேச்சி. பரிகாரம் செய்யணும்" என்றார் குருமூர்த்தி.
"அவள தொந்தரவு செய்யாம என்னவேனா பண்ணுங்க. அவ என் பொண்ணு. இனிமே இந்த குடும்பத்தை அவ எப்போதும் தொந்தரவு செய்யமாட்டானு நம்புறேன்" என்றாள் அம்மா.
தன்னை யாரோ கட்டி அனைத்து முத்தம் இடுவது போல் உணர்ந்தாள் அம்மா. அவளின் கண்ணில் அருவி போல் மழை.
"போய்வாமா... உன் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்றாள் அம்மா.
"நான் செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா இந்த குடும்பத்துல மறுபடியும் பொறந்து உங்களை சந்தோஷப்படுத்துவேன்" என்றாள் சாந்தி.
அம்மாவிடம் இருந்து விடை பெற்றாள் சாந்தி.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு....
அண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.